கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

மூன்று நிகழ்ச்சிகளும் ஒரு ஹைக்கூவும் (அ) இதுவா ஹைக்கூ?

எல்லாரும் குஷ்பு தங்கர் பச்சான் மற்றும் தமிழ் கற்பு பண்பாடு பற்றி தீவிரமான கருத்தாலோசனை செய்து கொண்டிருக்கும் போது, நான் S/W engineer’க்கே உரித்தான ஒரு புனித (?!) ஸ்தலத்துக்கு யாத்திரை சென்றிருந்தேன். பயனத்தில் மூன்று காட்சிகள் (நிகழ்ச்சிகள்) மனதில் நின்றன. ஹைக்கூ என்பது முரண் அல்லது ஆச்சரியம் கொண்ட ஒரு நிகழ்வை படம்பிடிப்பது - Snapshot என்று எங்கேயோ படித்த ஞாபகம். அதனால் முதல் காட்சியை அப்படி கொடுத்துள்ளேன் (நன்றாய் கிழிபடுவேன் என அறிந்தே!)
1.
ரயிலடி நொண்டி பிச்சைக்காரனின்
கட்டைக்காலில் உடைந்திருந்தது
சுண்டுவிரல்.

இன்னும் சரியாக வரவில்லை என நினைக்கிறேன். இரண்டாவது வரியிலேயே வரும் முரண்/ஆச்சரியம் கடைசி வரியில் தான் வரவேண்டுமோ? (பேசாமல் "உடைந்திருந்தது" எடுத்து அடுத்த வரியில் போட்டுடலாமா?:-) )

மற்ற இரண்டும் சரியாய் பிடிபடவில்லை, அதனால் அப்படியே...

2.
ரயில் பிடிக்கும் அவசரத்தில் ஒரு குடும்பம். அவர்களுடைய அவசரங்களுக்கு ஆட்படாமல் அந்த நிமிடத்தில் மட்டும் வாழ்வது போல் ஒரு சின்ன பெண் -பாதி காலியான ஒரு கோன் ஐஸ்கிரிமை சுவைத்துக்கொண்டு அப்பா பின்னால் சென்றுக்கொண்டிருந்தாள். ஐஸ்கிரிம் ஆர்வத்தில் அடிக்கடி பின் தங்கிவிடுகிறாள். அப்பா 2-3 முறை திட்டிவிட்டார். மறுபடியும் அந்த சின்ன பெண் பிந்தங்கிவிட, சற்று முன்னால் சென்றுவிட்ட அப்பா திரும்பி வருகிறார். வந்தவர் சட்டென்று அவளிடம் இருந்த ஐஸ்கிரிமை பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார் (அவளை அடிக்கவோ அல்லது தூக்கிக்கொண்டு போவார் என்றே எதிர்பார்த்தேன்) பின் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார். ஒரு நிமிடம் ஒன்றும் புரியாத குழந்தை, சுதாரித்து அவர் பின்னால் அழுதவாறே ஓடலானாள்.

3.
புனித ஸ்தலம் என்றேனே அது Chennai US counselate- தான்.
வேலை முடிந்து வெளியே வந்து சாலையை கடக்க முயன்றேன்.
"ஹலோ" திரும்பி பார்த்தால் ஸ்டென் -கன் சகிதம் ஒரு போலிஸ்காரர். சற்று பயந்தபடி அருகில் போனேன்.
"தமிழா?" - அவர்
"ஆமாங்க"
"வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா"?
"முடிஞ்சுதுங்க"
"படிக்க போறியா? வேலை பாக்கவா?"
"வேலைக்காக"
“நல்லது. ஆல் த பெஸ்ட்”
“தாங்ஸ்”
"நம்பள கொஞ்சம் கவனிச்சுட்டு போறது.."
அதுவரை இருந்த பயம் கலந்த மரியாதை சட்டேன மறைந்தது. பதில் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.
"தம்பி...ஹலோ" என என் பின்னாலிருந்து வந்த குரலை வாகனங்களின் சத்தம் அமர்த்திவிட்டது.

முதல் ஹைக்குவை(?) திருத்துங்கள், முடிந்தால் மற்ற இரண்டுக்கும் எழுதுங்கள்! மூன்றாவது முடியாது என்றே தோன்றுகிறது. இங்கே கவிஞர்களுக்கா பஞ்சம்?



பி.கு: எழுத்து பிழைகள், குறிப்பாக ண/ன மாற்றி உபயோகிப்பது இருந்தால் (இருக்கும்) எனக்கு அஞ்சலில் அனுப்பவும். மிக்க நன்றி!

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 22 (show/hide)

22 Comments:

Anonymous Anonymous said...

கலைந்தது பயம்-
எதிர்பார்க்கும் காவலன்கைத்
துப்பாக்கியிடம்.

இது பரவாயில்லையா பாருங்க..

நல்ல பதிவு.

9/27/2005 5:02 AM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

first comment was mine

9/27/2005 5:03 AM  
Anonymous Anonymous said...

1). நொண்டிப் பிச்சைக்காரனுக்கு
சுண்டு விரல் இல்லை
கட்டைக்காலில்

3). ஆயுதந்தரித்த போலீஸ்காரர்
தன்மானம் இழந்துநின்றார்
கவுரவ பிச்சை கேட்டு

2). ரயிலுக்கு ஓடும் அப்பா
அழுது தொடரும் குழந்தைக்கு
ஐஸ் க்ரீம் காரணம்


By: IBNU HAMDUN

9/27/2005 5:06 AM  
Anonymous Anonymous said...

நானே கத்துக்குட்டி என்கிட்டே கேக்கறிங்களே!
IBNU HAMDUNஒட முதல் ஒன்று ஒக்கே மாதிரி இருக்கு. மற்றவை ஒரளவே சரி போல இருக்கு.
நன்றிகள் - IBNU HAMDUN,சுரேஷ்

By: nandhan

9/27/2005 7:06 AM  
Anonymous Anonymous said...

சுவையான பதிவு. நமக்கும் ஹைக்கூவுக்கும் ரொம்ப தூரம். தொடர்ந்து எழுதவும்!

By: Mohan

9/27/2005 10:23 PM  
Anonymous Anonymous said...

சின்ன விஷயங்களை கூட உன்னிப்பா கவனிச்சா ஒரு சுவாரஸ்யம் இருக்கும்னு தெரியறது.

கவிதையேல்லாம் தெரியாதுப்பா..அதுவும் நிச்சியமா ஹைகூ தெரியாது!

என் வலைப்பதிவை உங்க பட்டியல்லே சேர்த்தமைக்கு நன்றி.

9/27/2005 11:17 PM  
Blogger Ramya Nageswaran said...

போன பின்னூட்டம் என்னுடையது.

9/27/2005 11:17 PM  
Blogger இராம.கி said...

அன்புடையீர்!

துளிப்பா (haiku) என்பது தமிழுக்குப் புது வடிவம். ஓரளவு அதன் உள்ளடக்கம் பலருக்குப் புலப்பட்டாலும், உருவில் இன்னும் சோதனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

துளிப்பா என்பது ஒரு கணநேரப் படப்பிடிப்பு. காட்சிகளின் தொடர்ச்சியாய் ஒன்றை விவரிக்கும் போது ஒன்றிற்கும் மேற்பட்ட துளிப்பாக்களில் தான் விவரிக்க இயலும். அதிலும் ஒரு சிக்கனத்தைக் காட்ட இயலும் தான். குறைந்த காட்சிகளில் கதையைக் கொண்டு வரலாம். துளிப்பாத் தொடரில் தேர்ந்த தொகுப்பு இருக்க வேண்டும்.

என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன். கீழே வருவதில் இருவுள் என்பது rail என்பதைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் rail என்பது இரும்பால் ஆன தண்டவாளத்தைக் குறிக்கிறது. இருவுள் என்ற சொல்லும் அப்படிப் பிறந்த சொல் தான். கவணை = gun; இங்கே நீங்கள் கூறியது போல் sten gun. "hello" என்பது தென் மாவட்டங்களில் கடற்கரைகளில் கூறப்படும் "எல்லா" என்பதற்கு இணையானது. எல்லன் என்பவன் தோழன்.

இனி முதற் பாட்டு.

1.
இருவுள் நிலையப் பிச்சைக் காரன்
நொண்டி யடிக்கும் கட்டைக் காலில்,
உடைந்து கிடப்பது சுண்டு விரலோ?

2.
இருவுள் பிடிக்கும் குடும்ப அவசரம்;
கவலை இன்றி, கையில் கூம்புடன்,
பனிக்குழை சுவைக்கும் பாலகி பின்னால்!

சின்னவள் பின்னுறச் சினமுறத் திரும்பி,
சட்டெனக் கூம்பைச் சடுதியிற் பிடுங்கி,
தன்வாய்க் குள்ளே தள்ளிடும் அப்பா!

விரைநடை அப்பா விழுங்கலைப் பார்த்து
ஒருகணக் குழப்பம்; ஓவெனக் கூவியே,
ஓடித் தொடரும் புரியாக் குழந்தை!

3.
நுழைமதி கிடைத்து வெளிவரும் மகிழ்ச்சியில்,
"தம்பி" என்னுமோர் கவணையர் அழைப்பு;
சட்டெனக் குமிழ்ந்தது திகைப்பும் பயமும்.

பதறிப் பக்கலில் போனதும் கேட்டது:
"வேலையா, படிப்பா, நுழைமதி கிடைத்ததா?"
காவல் கவணையர் ஆற்றுப் படுத்தலோ?

ஆர்ந்த கனிவில் பயத்தை விடுத்துத்
திரும்பினேன்; இம்முறை குழைவுப் பேச்சு;
"நம்மையும் கொஞ்சம் கவனிச்சுப் போறது"

பயமும் மதிப்பும் சட்டெனக் கரையச்
சாலை விரைந்தேன்; வண்டி இரைச்சல்;
"எல்லா" என்பதாய் அவரொலி கேட்டதோ?

அன்புடன்,
இராம.கி.

9/28/2005 12:35 AM  
Anonymous Anonymous said...

தி.ரு. இராம.கி அவர்களே, உங்கள் துளிப்பாக்கள் அருமை.

என்னுடைய முதல் சம்பவத்துக்கான முயற்சி இதோ:

இருவுள்நிலைய பிச்சைக்காரனின் கால் கட்டைவிரல்
உடைந்தது! நல்ல வேளை! அவனது
காலும் கட்டை தான்!!!

-வினோத்

9/28/2005 1:24 AM  
Anonymous Anonymous said...

இராம.கி அய்யாவுக்கு நன்றி.
கவிதைத்தனம் குறைவென்றாலும்
அமிழ்தாய் தமிழ் நிறைய இருந்தது

9/28/2005 1:24 AM  
Anonymous Anonymous said...

கட்டைக் கால் துளிப்பா என்னுடையது :-)
-வினோத்
http://visai.blogspot.com

By: வினோத்

9/28/2005 1:28 AM  
Anonymous Anonymous said...

கவிதைக்கான உங்கள் inspirationகள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள். எனக்குப்பிடித்த inspiration குழந்தை பற்றியது தான். அதை குழந்தையின் பார்வையில் எழுதினால் நன்றாக இருக்கும்

By: ரவிசங்கர்

9/28/2005 4:07 AM  
Anonymous Anonymous said...

ஆகா!
கிருஷ்ணன் - கலக்குறீங்க. தமிழ்ல புது வார்த்தைகள் கற்று கொடுத்தமைக்கு நன்றி.
ரம்யா, உங்களை போல ஒரு எழுத்தாளருக்கு வராததா? முயற்சி செய்ததில்லைன்னு சொல்லுங்க.
வினோத் - சொல்ல வந்தது சிறிது மாறுபடுகிறதே.
ரவி எனக்கும் அதே தான் தொன்றுகிறது.
வந்தவர்கள் எல்லாருக்கும் நன்றிகள்

By: nandhan

9/29/2005 12:44 AM  
Anonymous Anonymous said...

இந்த தமிழ் பின்னூட்டம் இடும் வசதிக்கான Template Code இருந்தா கொஞ்சம் என் மின்னஞ்சல் முகவரிக்கு kolkataprince@gmail.com அனுப்புங்களேன்...

By: யாத்திரிகன்

10/11/2005 7:37 AM  
Anonymous Anonymous said...

அம்மா கோலம் !

வெள்ளை மாவினால்,
புள்ளியும், பூவும் இல்லாமல் தன்
கோலத்தை போட்டு காட்டினாள் விதவைத்தாய் !

துனை நடிகை !

பாத்திரம் அறிந்து,
பிச்சைக்காரியானாள் துனை நடிகை
தான் நடிக்கும் படத்தில் !

மழைவரும் நேரம் !

மழைவரும் அறிகுறியாக புழுக்கம் வர,
மடங்கியிருந்த மயில் விசிறியை
விரித்து அசைத்தது கை !

வைக்கோல் கன்று !

வளராத தன்னுடைய வைக்கோல் கன்றைப்
பார்த்த தாய் பாசு தன் மடியில்
இன்னும் அதிகப் பால் சுரந்ததுதந்தது !

கூண்டு கிளி !

சின்ன கம்பி சிறைக்குள்ளிருந்து,
தன்னை அடைத்தவர்களை பார்த்து,
திருடன்! திருடன் ! எனப் பழித்துப் பேசியது கிளி !

நீரும் நெருப்பும் !

நெருப்பின் மேல் தவறுதலாக
நீர் விழுந்தது,
உடனே கருகியது நெருப்பு !

குரட்டை ஒலி !

துங்கும் மனிதனுக்குள்,
துங்கிய மிருகம் எழுந்து
இடைவிடாமல் எழுப்பிய சத்தம் !

யானை !

தந்தம் அறுக்கப்பட்டதால் இறந்த யானை
எழுந்து நின்று கொண்டிருந்தது,
தந்தத்தில் செய்த சின்ன வெள்ளையானையாக சோகேஸில்!
கோவி. கண்ணன்

10/11/2005 10:37 PM  
Anonymous Anonymous said...

அர்

By: chek

10/14/2005 1:49 AM  
Anonymous Anonymous said...

கண்ணா கலக்குறீங்க. உங்களுக்கு blog இருக்கா? உங்க முகவரிக்கு template அனுப்பியுள்ளேன். உதவி வேண்டும் என்றால் உங்கள் templateஐ எனக்கு அஞ்சலில் அனுப்பவும்.

By: nandhan

10/14/2005 1:52 AM  
Anonymous Anonymous said...

உலகட்கு ஏட்ர இனிய குரல் பலகி
பேசி மயங்கிகன் மூடின போது
உடல் பேசியது உரிய குரலில்.
குரட்டை.

10/22/2005 6:52 PM  
Anonymous Anonymous said...

2)குழந்தை பின்தங்கியதால் தண்டனை
அப்பாவின் வாய்புகுந்தது
அவள் ஐஸ்கிரீம்.
3)வெலவெலத்து நின்றேன் காவலர்முன்
பயமொழிந்தது அவர்கேட்டது
லஞ்சம்

சரியா வந்திருக்குங்களா?

10/24/2005 6:13 AM  
Anonymous Anonymous said...

கடைசி பின்னூட்டம் என்னுடையது

10/24/2005 6:14 AM  
Anonymous Anonymous said...

Anony @ 6.13AM: இரண்டாவதாய் இருப்பது நல்லா இருக்கு.
Anony @ 6.52AM:என்னங்க இது ஏதாவது புது Code language?
நீங்கள் இருவரும் பெயரை விட்டு போயிருக்கலாமே!

By: nandha

10/24/2005 7:16 AM  
Anonymous Anonymous said...

anony@ 6:13 am&6:14am நான் தாங்க. பெயர் போட்டேன் ஆனா இதுல வரலை.. என்னவோ தெரியலை.
நல்லா இருக்குங்களா

நன்றி
கீதா
http://geeths.info

By: கீதா

10/24/2005 7:31 AM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?